Chicago Tamil Sangam

வ.உ.சிதம்பரனார்

வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் (1872-1936) ஆறாண்டுச் சிறைத்தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பின் (1912 டிசம்பர் 24) புதுமனிதராக மாறிவிட்டார். தமிழறிஞரும் பேராசிரியருமான வையாபுரிப் பிள்ளை “தேசிய விஷயங்களில் உழைத்து வந்தவர் இப்போது தாய்மொழியாகிய தமிழின் பொருட்டு உழைக்க முன்வந்து சென்னையில் தங்கினார்” என்கிறார். சிறைவாழ்க்கை அவரை மொழியின் பக்கம் திருப்பும்படியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.இதன் பின்னர் வ.உ.சி. தன் 24 ஆண்டுகளை இலக்கியம், இலக்கணம்,சைவம் படிப்பிற்காக - ஆராய்ச்சிக்காகச் செலவிட்டிருக்கிறார்.

வ.உ.சி. தமிழறிஞரானதோ இலக்கியப் பதிப்பாசிரியரானதோ அகஸ்தமாய் வந்ததல்ல. அவர் பிறந்த தென்பாண்டி நாடு தமிழ், சைவம் இரண்டிற்கும் களமாக இருந்த இடம். அவர் சிறையிலிருந்தபோதே திருக்குறள் உரைகளைப் படித்திருக்கிறார்.

19ஆம் நூற்றாண்டில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். இதனால் பெரிய கூட்டங்களுக்குச் சாதாரண மக்கள் வருவதில்லை. வேடிக்கை பார்க்க சிலர் வந்தனர். அந்தக் காலத்தில் இந்துப் பத்திரிகைகளில் ஒரு வாசகர் “நமது ஜனத்தலைவர்கள் இங்கிலீசில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை” என்று எழுதியதைப் பாரதி மேற்கோள் காட்டினார். வ.உ.சி. இதைத் தலைவர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வ.உ.சி. மொழிப்பற்று வழி நாட்டுப்பற்று உருவாகும்; அதனால் தலைவர்கள் கூட்டங்களில் தமிழில் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்; மேடைகளிலும் பேசினார்.

வ.உ.சி. பதிப்பாசிரியர்; கட்டுரையாசிரியர்; மொழி பெயர்ப்பாளர்; உரையாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் பதிப்பித்தவற்றில் தொல்காப்பியம், சிவஞான போதம், திருக்குறள் ஆகிய மூன்றும் முக்கியமானவை. தொல்காப்பியம், இளம்பூரணத்தைப் பதிப்பித்ததை வையாபுரிப்பிள்ளை எழுதியிருக்கிறார். தொல்காப்பியம், பொருளதிகாரத்தின் முதல் இரண்டு இயலை வ.உ.சி. வெளியிடும் போது செல்வக்கேசவராய முதலியார் உதவியிருக்கிறார். பின்னர் வ.உ.சி.யும் வையாபுரிப்பிள்ளையும் இணைந்து பொருளதிகாரம் முழுவதையும் பதிப்பித்திருக்கின்றனர்.

திருக்குறள் பரிமேலழகர் உரையில் சில இடங்களில் பிழை உள்ளது என்ற கருத்துடையவர் வ.உ.சி. அவருக்குப் பிடித்த உரையாசிரியர் மணக்குடவர். இந்த உரை தமிழ்ப் பண்பாடு கருதி எழுதப்பட்டது என்று கருதினார் அவர். வ.உ.சி.யின் மணக்குடவர் உரை வெளிவர (1918) தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உதவியிருக்கின்றனர்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இன்னிலையும் ஒன்று என நம்பி அதைப் பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது தவறானது என மயிலை சீனி வேங்கடசாமி, மு. அருணாசலம் போன்றோர் எழுதிய பின்பு வ.உ.சி.யின் பதிப்பு தவறானது என்று தெரிந்தது. 1931இல் அனந்தராம அய்யர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ‘கைந்நிலை’ என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார். இதை வையாபுரிப்பிள்ளையும், கு. அருணாசலக்கவுண்டரும் எழுதியிருக்கின்றனர்.

திருநெல்வேலியைச் சார்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் ‘இன்னிலை’ என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சி.யிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என கூறியிருக்கிறார். வ.உ.சி.யிடம் இதற்குக் கணிசமாகப் பணமும் பெற்றிருக்கிறார். வ.உ.சி. அந்த ஏட்டை வெளியிட்டிருக்கிறார். சொர்ணம்பிள்ளை இப்படி வேறு சிலரையும் ஏமாற்றியிருக்கிறார். அவர்களில் ஒருவர் வ.வே.சு. அய்யர்.

வ.உ.சி. சிவஞானபோதத்தை 1935இல் உரையுடன் வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பை ஆ.இரா. வேங்கடாசலபதி முன்னுரை, பின்னிணைப்புகள், படங்களுடன் வெளியிட்டிருக்கிறார் (1999). இப்பதிப்பில் வ.உ.சி. சைவ சித்தாந்தம் தொடர்பாக எழுதி வெளிவராத ஒரு கட்டுரையும் உள்ளது.

வ.உ.சி. ஆரம்பத்திலிருந்தே சைவசமயம் தொடர்பான செய்திகளில் தீவிரமாய் இருந்தார். அவர் சிறையிலிருந்து வெளிவந்தபின் சென்னையிலும் (1913-1920) கோயம்புத்தூரிலும் (1920-24) வாழ்ந்தபோது சைவம் / தமிழ் இரண்டும் அவரை விடவில்லை. இக்காலங்களில் யோக வாசிஷ்டத்தை முறையாகப் படித்ததைச் சொல்லியிருக்கிறார். வ.உ.சி.யின் சிவஞானபோத இரண்டாம் பதிப்புக்கு அணிந்துரை எழுதிய சி.சு. மணி “வ.உ.சி. கடும் சைவத்தைக் கடுமையாக எதிர்கொண்டிருக்கிறார். அவருடைய சீர்த்திருத்த எண்ணங்கள் வேதாந்தத்தோடு சித்தாந்தத்தைச் சமரசம் காணவைத்துள்ளன” என்கிறார். பொதுமக்களுக்குப் புரியும்படியான உரை வேண்டும் என்பதற்காகச் சிவஞானபோத நூலுக்கு உரை எழுதியதாக வ.உ.சி. கூறுகிறார்.

மனம் போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்ற நூல்களை வ.உ.சி. மொழி பெயர்த்திருக்கிறார். வ.உ.சி.யை ஜேம்ஸ் ஆலன் (1864-1912) பெரிதும் கவர்ந்திருக்கிறார். ஆலன் கீழைநாட்டுத் தத்துவங்களில் ஈடுபாடுடையவர். வ.உ.சி. மொழிபெயர்த்த ஜேம்ஸ்ஆலனின் மனம் போல் வாழ்வு என்ற நூல் 13 பதிப்புக்களைக் கண்டிருக்கிறது. வ.உ.சி. வாழ்ந்தபோதே இப்பதிப்புகள் வந்தன. வலிமைக்கு மார்க்கம் நூல் 9 பதிப்புகளும் அகமே புறம் 6 பதிப்புகளும் பெற்றன.

எழுத்தாக்கம்: அ கா பெருமாள் புத்தகம்:தமிழறிஞர்கள்