கி. ஆ. பெ. விசுவநாதம்

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
முதல் இந்தி எதிர்ப்புப்போரில் (1938) தந்தை பெரியாரோடும், தமிழறிஞர்களோடும் கைகோத்துப் போராடிய முதன்மைப் போராளியே கி. ஆ. பெ. விசுவநாதம்.
1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களை தூண்டியதாகக் கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி. ஆ. பெ. விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. தன் வாழ்நாளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்கு துணை நின்றார்.
1956ஆம் ஆண்டு திசம்பர் 17ஆம் நாள் திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் “முத்தமிழ்க் காவலர்” என்னும் பட்டத்தை, அன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.எம்.நாராயணசாமியால்[5] திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் “சித்த மருத்துவ சிகாமணி” விருது வழங்கப்பட்டது
1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் “வள்ளுவ வேல்” என்னும் விருது வழங்கியது.
இயற்றிய நூல்கள்
- அறிவுக்கதைகள் (1984)
- அறிவுக்கு உணவு (1953)
- ஆறு செல்வங்கள் (1964)
- எண்ணக்குவியல் (1954)
- எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994)
- எனது நண்பர்கள் (1984)
- ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950)
- தமிழ் மருந்துகள் (1953)
- தமிழ்ச்செல்வம் (1955)
- தமிழின் சிறப்பு (1969)
- திருக்குறள் கட்டுரைகள் (1958)
- திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956)
- திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974)
- திருக்குறளில் செயல்திறன் (1984)
- நபிகள் நாயகம் (1974)
- நல்வாழ்வுக்கு வழி (1972)
- நான்மணிகள் (1960)
- மணமக்களுக்கு (1978)
- மாணவர்களுக்கு (1988)
- வள்ளலாரும் அருட்பாவும் (1980)
- வள்ளுவர் (1945)
- வள்ளுவரும் குறளும் (1953)
- வானொலியிலே (1947)
தமிழ்க் ‘காதலராய்’ வாழ்வைத் தொடங்கி தமிழ்க் ‘காவலராய்’ வாழ்வை நிறைவு செய்தவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். இயல், இசை நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்வாங்கி; பேசியும் எழுதியும் இயங்கியும் காத்து நின்றதால் அவரைச் சரியாகவே ‘முத்தமிழ் காவலர்’ என்று திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் 1957-ல் விருது தந்து பாராட்டியது.